முழு உத்வேகத்துடன் கமல்ஹாசன் : வேகம் எடுக்கிறது ‘சபாஷ் நாயுடு’!
இந்த ஆண்டு மே மாதம் ‘சபாஷ் நாயுடு’ படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படமாக தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.
அமெரிக்காவில் படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த நிலையில் இப்படத்தை இயக்கி வந்த ராஜீவ்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவும் இயக்குகிற வேலையையும் கமலே எடுத்துக் கொண்டார்.
கொஞ்ச நாள் படப்பிடிப்பு போன நிலையில் கமலும் தன்னுடைய வீட்டுப் படிகளில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதனால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்படும் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்த கமல் சபாஷ் நாயுடு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவிலேயே ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் என்றும் அதனை அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தனது மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் சார்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.