‘கசட தபற’ சீக்ரெட்டை உடைத்த சிம்பு தேவன்!
விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை இயக்கிய டைரக்டர் சிம்பு தேவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் கசட தபற.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கட் கம்பெனியும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார்கள்.
காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் கே.எல், விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.
வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய முயற்சியை செய்யும் போது அது எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறது. அதே போலவே தற்போது இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான ‘கசட தபற’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான அனைத்து கலைஞர்களும் இப்படத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுடன் ஜிப்ரான் மற்றும் சாம் சிஎஸ் போன்ற தற்போதைய பரபரப்பான இசையமைப்பாளர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். கசட தபற குழுவுக்கு இது ஒரு மிகப்பெரிய வரம்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும், தொடர்ந்து ஜுலையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
‘ஆந்தாலஜி’ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எப்பொழுதுமே மிகச்சிறப்பானது. இதுவும் அந்த வகையைச் சார்ந்ததா என்று கேட்டால் இல்லை என்கிறார் சிம்பு தேவன். “இந்தப்படம் ஆந்தாலஜி வகையைச் சார்ந்ததாக இருக்காது. ஆந்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார்.