கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் – ஆவணப்பட விழாவில் சூர்யா நெகிழ்ச்சி

பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியோரது ஆவணப்படம் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
திரையுலகினர் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசுகையில், 40 வருடங்களாக 4 தலைமுறையை வைத்து படம் எடுத்த கிருஷ்ணன் பஞ்சு அவர்களை பற்றி 2 மணி நேரத்தில் அழகாக கொடுத்த தனஞ்செயனை பாராட்டிப் பேசினார். மேலும் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.
நடிகர் சூர்யா பேசுகையில், உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்வி தான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இயக்குநர் தனஞ்செயன் அவர்கள் பேசுகையில், இப்படம் எடுப்பதைப் பற்றி பஞ்சு அவர்களின் மூன்றாவது மகன் அபிமன்யு முதலில் என்னிடம் பேசினார். இப்படத்தை முடித்த பிறகு, இன்னும் பல சாதனையாளரின் ஆவணப்படங்களை இயக்க ஆவலாக உள்ளேன் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். மேலும், இயக்குநர் சுபாஷ் அவர்களும் இந்த ஆவணப்படத்தில் கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். ஆனால், இன்று அவர் நம்மிடையே இல்லை. இப்படம் எடுத்து முடிக்கும் முன்பே அவர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார். அவருக்கும் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன் என்று கூறினார்.
இறுதியாக பேசிய அபிமன்யு, பஞ்சு அவர்களின் மூன்றாவது மகன் இப்படத்திற்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி கூறினார். பின்பு, அப்பாவின் நினைவு நாளான இன்று இப்படம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் இதே நாளில் சிறந்த எடிட்டர் மற்றும் இயக்குநருக்கான விருதுகளை கிருஷ்ணன்பஞ்சு என்ற பெயரில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனை நடிகர் சிவகுமார் அவர்கள்தான் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.