முத்தையா முரளிதரன் சர்ச்சை! – விஜய் சேதுபதி நடிப்பாரா?
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.
முத்தையா முரளிதரன் சிங்கள அரசுக்கு ஆதரவானவர் என்பதால் அவருடைய இந்த முடிவுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கும் முடிவை கை விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி ”கண்டிப்பாக தான் இந்தப்படத்தில் நடிப்பேன். இது தமிழர்களுக்கு எதிரான படமாக இருக்காது, படம் வெளியான பிறகு நீங்களே பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லலாம்” என்றும் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் அவருடைய கருத்தை ஏற்க மறுத்த ஈழத்தமிழர்கள், விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் இந்த நேரத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அங்கு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ”2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்கு அப்புறம் தான் நாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோம்” என்று பேசினார்.
அவருடைய பேச்சில் நேரடியாக விடுதலைப்புலிகளை குறிப்பிடவில்லை என்றாலும், ”விடுதலைப்புலிகளை சிங்கள் அரசு ஒடுக்கிய பிறகு தான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது” என்கிற அர்த்தத்தில் பேசியது போல் உள்ளது என்று ஈழத்தமிழர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த சமயத்தில் விஜய் சேதுபதி அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துத்தான் ஆக வேண்டுமா? அப்படி நடித்தால் அவருடைய புதிய படங்களுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்குமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.