நாலு பேருக்கு நாளை நல்லது செய்யப்போகும் சூர்யா!

இயக்குனர் மணிரத்னத்துடன் “அலைபாயுதே” “டும் டும் டும்” “கன்னத்தில் முத்தமிட்டால்” “கடல் ஆகிய படங்களில் இணை இயக்குனராய் பணியாற்றியாவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ் ”நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், உதய கீதம், சின்னக் கவுண்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும், பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம், எஸ்.பி. முத்துராமன், ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினோஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார்.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஸ், ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆல்ஃபா ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா நாளை 27 பிப்ரவரி அன்று மாலை 6 மணிக்கு தனது ட்விட்டரில் வெளியிடுகிறார்
பிரபு வயசு 23, அப்பா சப்-இன்ஸ்பெக்டர், நேர்மையானவர். அம்மா இல்லாத பிள்ளை. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த பைக் விபத்தில் இறந்து போன அண்ணனின் நண்பர்களான அணில், ஸ்ரீதர், ஜானி, ஆகிய மூவர் மட்டும் தான் பிரபுவின் தற்போதய உறவுகள்.
சரி இது எப்பேர்ப்பட்ட படம் தெரியுமா?
மலேசியாவில் இருக்கும் நண்பன் ஆனந்த் உதவியுடன் கோலாலம்பூரில் செட்டில் ஆக வேண்டும் என்கிற பிரபுவின் எண்ணத்திற்கு தேவைப்படும் பணம் நேர்மையான அப்பா மூலம் கிடைக்காது என்பது பிரபுவிற்கு நன்றாகவே தெரியும். அதனால், தன் நண்பர்களான அணில், ஜானி மற்றும் ஸ்ரீதருடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வரும் பிரபு, அதன் முலம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தான். சந்தோஷமாகவும் இருந்தான். ஆனால் ஒருநாள் எல்லாம் தலைகீழாய் மாறியது. “கூடா நட்பு கேடில் முடியும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப, இந்த மூவரின் நட்பே பிரபுவிற்கு எமனாக மாறியது.
தன் கழுத்தை வெட்ட வந்த அரிவாளிடமிருந்து பிரபு குனிந்து தப்பினானா, அல்லது அரிவாளிக்கு கழுத்தை கொடுத்தானா என்பதினை விறுவிறுப்பான திரைக்கதையிலும், சுவாரஸ்ய முடிச்சுகளுடனும் சொல்லும் படமே இந்த “நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல” படமாம்!