”நெஞ்சில் ஒரு ஓவியம்” – ரொமான்ஸ் டைட்டிலில் ஒரு ஹாரர் படம்
‘நெஞ்சில் ஒரு ஓவியம்’ என்கிற டைட்டிலை படித்ததும் இது முழுக்க முழுக்க காதல் படமோ? என்று நினைக்கலாம். ஆனால் இப்படி ஒரு காதல் டைட்டிலில் காதல் மட்டுமில்லாமல், காமெடி, செண்டிமெண்ட் ஹாரர் ஆகியவையும் கலந்த படமாக திரைக்கதை எழுதி சாமுவேல்ராஜ் உடன் இணைந்து இயக்கித் தர இருக்கிறார் சுகுணா கந்தசாமி.
ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.ஜோதிபிள்ளை – சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ‘தங்கரதம்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக கே.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். இவர்களுடன் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குனர் கே.ஜோதிபிள்ளையிடம் கேட்டபோது, ”இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த, ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்த படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரை சுற்றிதான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும்.
ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெயிண்டிங் துறையில் மிகப்பெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார். இடையில் காதலில் விழும் அவனுக்கு சில பிரச்னைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளை எப்படி கையாண்டான் அதிலிருந்து எப்படி வெளியேறி வாழ்க்கையில் ஜெயித்தான் என்பதை ஹாரர், காதல், செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம். ஹாரர் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.