‘ஒ காதல் கண்மணி’ ரகசியத்தை உடைத்த வைரமுத்து!
”இன்னும் அஞ்சே நாள்தான். படத்தோட கதை என்னன்னு நீங்களே தெரிஞ்சுக்கலாம். அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன் ப்ளீஸ்…”
‘ஒ காதல் கண்மணி’ படத்தோட கதை பற்றிய ஒரு நிருபரின் கேள்விக்கு மணிரத்னம் தந்த பதில் இது.
அந்தளவுக்கு கதையை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். ஆனால் மேடைக்கு முதலில் பேசக் கூப்பிட்டதாலோ என்னவோ பேசுகிற சுவாரஷ்யத்தில் படத்தின் கதையை உளறிக் கொட்டினார் கவிப்பேரரசு வைரமுத்து.
இன்று நடந்த ‘ஒ காதல் கண்மணி’ ஆடியோ சக்சஸ் மீட்டில் தான் இப்படி ஒரு சங்கடமான நிகழ்வு நடந்தது.
என்னைப் போன்ற ஒரு படைப்பாளன் கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விட முடியும். எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் ஒரு திரைக்கலைஞன் அதே கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகள் முதலீட்டோடு உள்ளே இறங்க வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டால் அவன் தப்பிப்பான். இல்லையென்றால் அவன் வீசிய கத்தியில் அவனே மாட்டிக்கொள்வான் என்கிற நிலைமை இருக்கிறது. ஆதையெல்லாம் தாண்டி ஒரு பரிசோதனை முயற்சியாக மணிரத்னம் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்.
இன்னும் 50 ஆண்டுகளின் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்கிற சந்தேகம் சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாதல் என்கிற பெரிய ராட்சஸ அலையில் வட்டார கலாச்சாரங்களும் மொழிகளும், தனிக்கூறு பண்பாடுகளும் மெல்ல மெல்லம் அதிர்வுகள் காணக்கூடிய ஒரு நிலையில் இந்தப்படம்வெளிவருகிறது.
இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மையின் வெளிச்சம் நம் கண்களுக்கு பிரகாசமாகும் என்றே நான் நினைக்கிறேன். என்றவர் ஏதேதோ சொல்ல வந்தேன். முதலில் அழைத்ததால் மறந்து விட்டேன் என்றார்.
அதாவது திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தலாம். பிடித்தால் சேர்ந்து வாழலாம். இல்லை என்றால் பிரிந்து விடலாம் என்கிற சர்ச்சைக்குரிய living together சமாச்சாரம் தான் ஒ கே கண்மணியின் கதை என்கிற சந்தேகம் வலுத்து வருகிற வேளையில் வைரமுத்து மேடையில் கதையை உளறியதும் அதிர்ச்சியடைந்து விட்டார் மணிரத்னம்.
நான் கதையைப் பத்தின விஷயத்தை சொல்ல வேணாம்னு வைரமுத்து சார்கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்திருக்கணும். நான் மறந்துட்டேன். என்றார் சங்கடத்துடன்…
எப்படியோ படம் ரிலீசானது சர்ச்சைக்குள் சிக்காமல் இருந்தால் சரி.