உதவிகள் செய்யுங்கள் ஆனால்..? :ரஜினி போட்ட அதிரடி உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரையுலகம் சார்பில் நடிகர், நடிகைகள் பலரும் பல்வேறு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
விஷால், கார்த்தி உள்ளிட்ட இளம் நடிகர், நடிகைகள் குழுவாக இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவிகள் செய்தால் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நிவாரண நிதியை நடிகர் சங்கம் மூலம் அரசிடம் சேர்த்து வருகிறார்கள்.
குறிப்பாக ரஜினியை எல்லோரும் வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டும் தான் நிதி கொடுத்தார். மற்றபடி எந்த உதவிகளும் செய்யவில்லை என்கிற செய்திகள் இணையதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே நேற்று திடீரென்று 10 கோடி ரூபாயை தமிழக அரசிடம் நன்கொடையாக கொடுத்திருக்கிறார்’ என்று வட இந்திய ஊடகங்கள் கொளுத்திப் போட கடைசியில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
ஆனால் உண்மையில் 10 லட்சம் ரூபாய் நிதி மட்டுமின்றி கூடுதலாக சுமார் நான்கு கோடி ரூபாய் வரையிலான நிவாரண உதவிப்பொருட்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய உத்தரவிட்டு அந்த நிவாரண வேலைகள் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது, இன்றும் தொடந்து கொண்டிருக்கிறது என்பதே நிஜம்.

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த நிவாரண பொருட்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பிரித்து பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரடியாக ரஜினி ரசிகர்கள் விநியோகம் செய்து வருகிறார்கள்.
அரசாங்கம் கஜானாவுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து பேர் வாங்குவதை விட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களாகக் கொடுத்தால் அதுவே மிகச்சிறந்த உதவி என்பதே உண்மை. அந்த வழியில் தான் நிதியை லட்சங்களில் கொடுத்து விட்டு நேரடி உதவிகளை கோடிகளில் செய்யச் சொல்லியிருக்கிறார் ரஜினி.
அதோடு ‘எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யணும், ஆனால் விளம்பரமெல்லாம் செய்யக்கூடாது, அதெல்லாம் எதுவும் வேண்டாம் ‘ என்று உத்தரவு போட்டுத்தான் இந்த உதவிகளைச் செய்யச் சொன்னாராம் ரஜினி.