இனி 6 மாதத்துக்கு ஒரு படம்! – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு
குட்டீஸ்கள், குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் மிஸ்டர். லோக்கல்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப்படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது எந்த மாதிரியான படம் என்பது பற்றி சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் ஹீரோ சிவகார்த்திகேயன்.
”இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன்.
அதன்பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சு வார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
நயன்தாரா உடன் இது எனக்கு இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.
சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.