”நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது” – சூர்யா பரபரப்பு பேச்சு
‘அறம் செய்ய விரும்பு’ புத்தக வெளியீட்டு விழா நேற்று மார்ச் 5-ம் தேதி சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்திரிகையாளர் சமஸ் , திரு. கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது என்று வேதனையோடு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து அவர் பேசியதாவது… ”பன்னிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் 45 சதவீதம் அதிகம். இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
யாராக இருந்தாலும் சரி அவர்கள் மூலம் ஒரு குழந்தையின் கல்வி மேற்கொள்ள படுகிறதோ அப்போது தான் அகரம் முழுமை அடையும். பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க்கப்படும்.
இப்போது மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும். இலவச கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது. மதிய உணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள். இப்போது காணப்படும் கல்வியானது நடைமுறைக்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. உலகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாணவர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வேண்டும். கல்வி தரம் உயர வேண்டும். மதிப்பெண்கலுக்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நூலகம் இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் கடை உள்ளது” என்றார் சூர்யா.