பெரிய நடிகர்களின் சம்பளம்! – திருநாவுக்கரசர் அட்வைஸ்
கதைத் திருட்டை கருவாகக் கொண்டு தயாராகியிருக்கும் படம் ”படைப்பாளன்”.
எல்.எஸ்.தியன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.எஸ். பிரபுராஜா எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடன் மனோபாலா, இயக்குனர் தருண் கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, “ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறைய பேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப் படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம்.
இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கல்சட் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது” என்றார்.