ஆர்கானிக் உணவுப் பொருள்கள் சரியானது தானா..? – பகீர் கிளப்பும் ‘திசை’ இயக்குனர்

Get real time updates directly on you device, subscribe now.

லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’.

இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வரதராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன். யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் வரதராஜன் கூறும்போது, “இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி இந்த ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகின்றது. அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம்.

உதாரணத்திற்கு சொல்லப்போனால் நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் ஆர்கானிக் முறையில் கேன்சரை குணமாக்குகிறேன், சர்க்கரை நோயை இல்லாமல் செய்கிறேன் என சிலர் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது வருகிற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் சரியானது தானா என்பதையும் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம்.

இந்த ஆர்கானிக் பொருட்கள் மோசடியால் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த மோசடி குறித்து ஆய்வு செய்தபோது நிறைய அதிர்ச்சியான தகவல்கள் எனக்கு கிடைத்தன. ஆர்கானிக் உணவுப்பொருட்களின் மீதான மக்களின் நம்பிக்கையை காசாக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தே இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

Related Posts
1 of 134

அதுமட்டுமல்ல ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் நடக்கும் சில மோசடிகளையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளோம். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் நபர் ஒருவரே இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்பதால் அதை பற்றிய நிறைய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.

இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இந்தப்படம் முக்கோண காதல் கதையாகவே நகரும்.. ஒருவர் ஆர்கானிக் உணவுப்பொருட்களில் நடக்கும் மோசடியையும், இன்னொருவர் ரியல் எஸ்டேட் பிசினஸில் நடக்கும் மோசடிகளையும் இரண்டு ஹீரோக்களுக்கு இணையாக இரண்டு வில்லன்களும் படத்தில் இருக்கின்றனர்.

எனது குருநாதர்கள் காமெடி, ஆக்‌ஷன் ரூட்டில் பயணித்தாலும் அதிலேயே தொடர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.. இந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்கப்படனும்னு எங்களை பாராட்டியது மறக்க முடியாதது” என்கிறார் வரதராஜன்.

சமீபத்தில் தான் இந்தப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.. இப்போது இயக்குனர் கரு.பழனியப்பன் இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார்.

சென்னை மற்றும் திருச்சி துறையூர் பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 45 நாட்கள் நடத்தியுள்ளார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.