என் படத்துக்கு சாதி சாயம் பூசாதீர்கள் – இயக்குனர் வேண்டுகோள்
படத்தின் தலைப்பைப் போலவே வித்தியாசமான கதையம்சத்துடன் தயாராகி வருகிறது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘தொரட்டி’.
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. படம் குறித்துப் பேசிய இயக்குனர் பி.மாரிமுத்து, ” ‘தொரட்டி’ என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள்.
மேலும் தொரட்டி ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப் படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர் தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர் எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது.
இந்தப்படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவுசெய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் வைத்தார்.