‘வான் மூன்று’ படத்தின் பிரஸ்மீட்!

Get real time updates directly on you device, subscribe now.

சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர்.

நிகழ்வில் இயக்குநர் முருகேஷ், “வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே ‘வான் மூன்று’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன். படத்தில் நடித்துள்ளவர்கள் டேட் இப்போது பிஸியாக உள்ளதால் அவர்களால் வர முடியவில்லை. நிச்சயம் அடுத்தடுத்த புரமோஷன்களில் கலந்து கொள்வார்கள்”.

நடிகை லீலா தாம்சன் பேசியதாவது, “இயக்குநர் இந்த கதை சொன்ன போது எனக்கு முதலில் புரியவில்லை. நேரில் சந்தித்து கதை சொன்ன போதுதான் நான் ஒத்துக் கொண்டேன். இந்தப் படத்தில் புதியவர்கள் போலவே அனுபவம் வாய்ந்தவர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடனும் டெல்லி கணேஷ் சாருடனும் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது, “இந்தக் கதை கேட்டபோது நான் எதிர்பார்த்தபடி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல் இந்த அணியினர் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால், தைரியமாக ஒத்துக் கொண்டேன்” என்றார்.

எடிட்டர் அஜய் மனோஜ், “மூன்று பேருடைய கதை என்பதால் என் எடிட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ளவும் புதிதாக கற்றுக் கொள்ளவும் நிறைய விஷயங்கள் இதில் இருந்தது”.

ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ், “இந்தக் கதை ஹாஸ்பிடலில் நடந்ததால், முழுக்க அங்குள்ள ஒளிகளை வைத்தே மேனேஜ் செய்தோம். அது பலருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி” என்றார்.