மெர்சலுக்கு வந்தது போல எதிர்ப்பு வருமோ? – ‘இரும்புத்திரை’ சீக்ரெட்டை உடைத்த விஷால்
‘மெர்சல்’ படத்துக்கு எதிராக பி.ஜே.பி விசுவாசிகள் ஆற்றிய எதிர்வினை இனி தங்கள் படங்களுக்கும் அரசியல்வாதிகளில் இந்த கரிசனம் கிடைக்காதோ என்று ஏங்க ஆரம்பித்து விட்டனர் தயாரிப்பாளர்கள்.
கிட்டத்தட்ட அப்படி ஒரு கரிசனம் விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் இரும்புத்திரை படத்துக்கும் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று விஷால் பேசிய பேச்சிலிருந்தே புரிந்து கொள்ள முடிந்தது.
விஷால் – சமந்தா நடித்திருக்கும் இப்படத்தை மித்ரன் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நடந்த படத்தின் ஆடியோ பங்ஷனில் தான் மெர்சல் டைப்பில் பரபரப்பை கிளப்பப் போகும் சமாச்சாரம் பற்றிப் பேசினார்.
”சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம்.
இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்கிற அனைவரும் அரசியல்வாதிகள் தான். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் விஷால்.
முன்னதாக விழா துவங்கியதும் கிட்னி ஃபெய்லியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான என். மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார்.