சக நடிகரின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுபவர் அஜித்! : விஜயகுமார் நெகிழ்ச்சி
எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்தும் கிடைக்காத ஒரு இடம் அருண்விஜய்க்கு அஜித்தின் ”என்னை அறிந்தால்” படத்தில் ஏற்று நடித்த விக்டர் என்ற வில்லன் கேரக்டரில் கிடைத்தது.
அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக ஆரம்பித்திருக்கும் அருண்விஜய் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழில் நடித்து வரும் படம் தான் ‘குற்றம் 23’. அருண்விஜய்க்கு ஜோடியாக மஹிமா நடிக்க அறிவழகன் இயக்கியிருக்கிறார்.
நேற்று சென்னையில் நடந்த இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் அருண்விஜய்யின் அப்பாவும், மூத்த நடிகருமான விஜயகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இயக்குநர் கெளதம் மேனனுக்கு வாழ்நாள் முழுவதும் நானும் என் மகனும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ”அருண் விஜய் கதாநாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. சுமாராக ஓடியிருக்கிறது. ஓடாமல் இருந்திருக்கலாம்.
இப்படியெல்லாம் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ”என்னை அறிந்தால்” படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார். அந்தப்படத்தில் அருண்விஜய் நடித்ததால் அஜித் அவர்களின் ரசிகர்கள் எல்லோரும் அருண் விஜய்க்கு ரசிகர்களாகி இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அருமைத் தம்பி அஜித் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நடிகன் இன்னொரு நடிகனின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். அதுதான் அஜித், அதுதான் தல. அதற்கு காரணமாக இருந்தவர் தான் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்கள் தான். அவருக்கு நானும் என் மகன் அருண்விஜய்யும் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்றார்.