கரையோரம் – விமர்சனம்

Rating : 2.5/5
பீச் ஓரமா இருக்கிற ஒரு ரிசார்ட்ல நடக்கிற திகில் சம்பவங்கள் தான் இந்த ‘கரையோரம்’.
அப்பாவின் எதிர்ப்பையும் மீறி அக்காவை அவனது காதலனுடன் சேர்த்து வைக்கிறார் நிகிஷா. மகளின் இந்த நடவடிக்கையால் நொந்துபோகும் அப்பா ராதாரவி இறந்து போக, சில வருடங்கள் கழித்து அக்காவும், அவளது குழந்தையும் திடீரென்று இறந்து போகிறார்கள்.
அப்பா, அக்கா, அக்கா மகள் என தன் பாசத்துக்குரியவர்கள் அடுத்தடுத்து இறந்து போன சோகத்தில் இருக்கும் நிகிஷாவை மன அமைதிக்காக தனது பீச் ஹவுஸில் தங்கி ஓய்வெடுக்க அனுப்பி வைக்கிறாள் உயிர்த்தோழி இனியா.
போன இடத்தில் லைட் ஹவுஸில் தங்கியிருக்கும் வசிஷ்டாவின் நட்பு நிகிஷாவுக்கு கிடைக்கிறது. அவனது நல்ல நடவடிக்கைகளில் மயங்கி அவன் மீது காதலில் விழுகிறார். அந்தக் காதல் விவகாரம் தோழி இனியாவுக்கு தெரிய வர, அவரோ ”அப்படி ஒரு ஆளே அங்கு கிடையாது. அவன் இறந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகி விட்டது” என்று அதிர்ச்சி தருகிறாள்.
சுற்றியிருப்பவர்களும் அதேபோல ”ஆமாம் போட, மீண்டும் கண்முன்னே வந்து நிற்கும் வசிஷ்டாவை பார்த்து ஷாக் ஆகிறாள். அவன் பின்னணியின் நடப்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போதுதான் தன்னைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் சதிவலை தெரிய வருகிறது.
அதிலிருந்து நிகிஷா எப்படி மீண்டு வருகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
ஹீரோவாக வரும் வசிஷ்டா நல்ல உசரம். இன்னும் கொஞ்சம் ஆக்டிங்கில் மெனக்கிட்டால் விஷால் லெவலுக்கு கூட வரலாம்.
எந்த ஆங்கிளில் பார்த்தாலும் படு கவர்ச்சியாகத் தெரிகிறார் நாயகி நிகிஷா பட்டேல். மொத்தைக் கதையும் இவரைச் சுற்றித்தான் நகர்கிறது .
குட்டைப்பாவாடை, அரைக்கால் டவுசர், என படம் ‘அளவெடுத்த’ காஸ்ட்யூம்களில் முழுக்க கிளாமர் டாலாக வருகிறார் பிரிட்டீஷ் இண்டியன் கொலாப்ரேஷன் நிகிஷா பட்டேல். நடிப்பிலும் குறை சொல்ல முடியாமல் நம்மை கவர்கிறார்.
உயிர்த்தோழியாக வரும் இனியா ”உன்னோட லேப்டாப்ல என்னோட போட்டோவை வெச்சிருக்க, உன்னை மாதிரி ஒரு ப்ரெண்ட் கெடைக்கிறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும்” என்று சொல்லுவது செயற்கைத் தனம், அப்போதே ஏதோ ஒன்று அவரால் பிற்பகுதியில் நடக்கப் போகிறது என்று யூகித்து விட முடிகிறது.
பத்து நிமிடங்களே வந்தாலும் கிளைமாக்ஸில் மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக ஆக்ஷன் அவதாரமெடுத்திருக்கிறார் சிம்ரன். ஒரு சில காட்சிகளில் தலைகாட்டினாலும் அன்புள்ள அப்பாவாக மனதில் பதிகிறார் ராதாரவி.
போலீஸ் ஸ்டேஷனில் சிங்கம்புலி, மனோபாலா, இன்னொரு பொன்னம்பலம் சைஸில் இருக்கும் ஒரு ஏட்டையா என மூன்று காமெடி பீஸுகள் இருந்தும் கூட சிரிப்பதற்கு ஒரு சீன் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றம் தான்.
ஜெய் ஆனந்த்தின் ஒளிப்பதிவில் கடற்கரையோர கொள்ளை அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
சுஜித் ஷெட்டியின் பின்னணி இசையும், பாடல்கள் சுமார் தான். வேகமாக நகரும் காட்சிகளுக்கு இடையே திடீரென்று வரும் பாடல்களை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
ஒரு லைட் ஹவுஸ், அதன் அருகில் ஒரு ஹெஸ்ட் ஹவுஸ் இந்த இரண்டு ஏரியாக்களை மட்டும் கதைக்களங்களாக வைத்து கூடா நட்பு கேடில் தான் போய் முடியும் என்கிற கருத்தை கிளாமர் வித் க்ரைம் த்ரில்லர் படமாகத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் குமார்.
கரையோரம் – ரிலாக்ஸ்டா ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்!