நீங்க சண்டை போட்டுக்கங்க.., நான் ஷூட்டிங் போறேன்… – டார்ஜிலிங் சென்றார் ரஜினி!
ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘காலா’ திரைப்படம் ரிலீசாகி விட்டது.
படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கபாலியை கம்பேர் செய்கிற போது காலா நூறு மடங்கு பெட்டர் என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் படத்தில் ரஞ்சித் முன் வைத்திருக்கும் அரசியல் குறித்தும், ரஜினி படங்களில் பேசும் வசனங்களும், நிஜ வாழ்க்கையில் அவருடைய செயல்பாடுகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை முன் வைத்தும் சமூகவலைத் தளங்களில் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து ரஜினியின் கருத்து என்னவாக இருக்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. காரணம் கபாலி படம் ரிலீசான போதும் படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், அதில் பேசப்பட்ட அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார் ரஜினி.
அதேபோலத்தான் காலா படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் அவர் ஏதாவது கருத்து தெரிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த முறை அவர் எதுவும் பேசவில்லை. மாறாக காலா ரிலீசாகி விட்டது, இனி அடுத்த படத்தின் வேலையைப் பார்ப்போம் என்று கிளம்பும் ஹீவோவைப் போல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தில் நடிப்பதற்காக கிளம்பிப் போய் விட்டார்.
டார்ஜிலிங்கில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. தொடர்ந்து ஒரு மாதம் டேராடூனிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக படக்குழு டார்ஜிலிங் சென்றுள்ளது. 3 மாதத்தில் ஷூட்டிங் முடித்து படத்தை வேகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்
வரும் 2019ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருக்கிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக பலருடன் சேர்ந்த நடித்த சிம்ரன் ரஜினியுடன் ஜோடி சேரவில்லை. தற்போது முதல்முறை இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.