மெரினா பீச்சில் கர்ச்சிப் விற்கும் நடிகை! – எங்கப்பா நடிகர் சங்கம்?
எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி, அஜீத், விஜய் வரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. குறிப்பாக ஒரு படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென வெரட்டிட்டு போ’, என்று அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமானது.
அப்படி ஒரு பெருமைக்குரியவர் இன்றும் மெரினா பீச்சில் 5ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கர்ச்சீப் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
பெற்றெடுத்த பிள்ளைகள் 9 பேர் இருந்தும் கூட ஒருவருமே அவரை கவனிக்காத நிலையில், பட வாய்ப்புகளும் முன்பு போல் இல்லாத நிலையிலும்
வாழ்க்கையை நகர்த்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று வருகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். அவர்களோடு உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் கண்டிப்பாக ஒரு கர்ச்சிப் வாங்கிச் செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.
’நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.
500 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கிடைத்த வருமானம் மிகவும் சொற்பம்தான். அதையும் நான் எனது பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படுகிறேன்.
எனவே சில மாதங்களாக இங்கே வந்து வயிற்றுப் பிழைப்புக்காக கர்சீப் விற்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதில் பெரிய வருமானமில்லை. கால்வயிறு அரைவயிறுமாய்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார் ரங்கம்மா பாட்டி.
தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் திரைப்பட கலைஞர் பாதிக்கப்பட்ட செய்தி வந்தால் உடனே பண உதவி செய்யும் நடிகர் சங்கம், அந்த சங்கம் இருக்கும் சென்னையிலேயே பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டிருக்கும் ரங்கம்மா பாட்டிக்கு நடிகர் சங்கம் ஏதாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.