விஜய் ஆண்டனி மென்மையானவர் : அறிமுக நாயகியின் அட்ராசிட்டி..!

அன்றும், இன்றும், என்றும் தமிழ்சினிமாவுக்கு கேரளாவில் இருந்து தான் கதாநாயகிகள் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும், எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையும் அவர்களை இங்கு உச்சத்தில் உட்கார வைக்கிறது.
அந்த வரிசையில் ‘பூ’, டிஸ்யூம்’ ஆகியப் படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் வர இருக்கும் ‘பிச்சைகாரன்’ படத்தின் அறிமுகம் சேத்னா டைட்டனும் ஒரு கேரள வரவு தான்.
”இதுவரை என்னை தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக நடித்து உள்ளேன். ஆனால் நான் சினிமாவுக்கு வரப் போகிறேன் என்றதும் என் குடும்பத்தில் பெரும் களேபரமே நடந்து விட்டது.
நான் என் முடிவில் தீவிரமாக இருப்பதை பார்த்த என் பெற்றோர்கள், போனால் போகட்டும் என்றே நடிக்க விட்டார்கள். விளம்பரங்களுக்காக கேமரா முன்பு நான் நடித்து இருந்தாலும், சினிமா படப்பிடிப்பில் கேமரா முன் நிற்க முடியவில்லை. பயத்தில் கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது. நடிகையான பின்பு வர உள்ள புகழும், பெயரும் தான் இந்த அச்சத்தை தருகிறது என்று நினைக்கிறேன்.
ஆயினும் படப்பிடிப்பில் பயம் இன்றி நடிக்க எனக்கு தைரியம் கொடுத்த இயக்குனர் சசி சாருக்கு நன்றி. இயக்குனர் சசி சாரின் படத்தில் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரதுப் படங்களில் கதாநாயகிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அப்படி இருக்கும்.
என்றவர் ஹீரோவைப் பற்றி வாசிக்காமல் இருப்பாரா?
விஜய் ஆண்டனி சார் வெளித் தோற்றத்தில் மிகவும் மென்மையாக இருப்பவர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது வேகத்தில் ஒரு அசுர பலம் தெரியும். சினிமா, சினிமா, என்றே எந்த நேரமும் அதே கவனத்தில் இருப்பார். தொடர்ந்து மூன்று படங்கள் ஹிட் கொடுத்து இருப்பதின் சூட்சுமம் இதுதான் என்று நினைக்கிறேன். நான் பார்த்த வரையில் பிச்சைக்காரன் படமும் அவரது வெற்றி பட்டியலில் நிச்சயம் சேரும்” என்றார் சேத்னா.