திட்டமிட்டபடி ‘செய்’ படம் ரிலீசாகுமா? – மன உளைச்சலில் நகுல்

Get real time updates directly on you device, subscribe now.

ப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில் படம் எடுப்பதை விட அதை ரிலீஸ் செய்வது தான் பெரும் சவாலாக இருக்கிறது. இந்தச் சிக்கலை களையவே மாதத்தில் முதல் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் பெரிய படங்கள் ரிலீஸ் செய்வது என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய படங்களை ரிலீஸ் செய்வது என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விதிமுறை கொண்டு வரப்பட்டு கடந்த சில மாதங்களாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறைப்படி நவம்பர் 16-ம் தேதி ரிலீசுக்குத் தயாரான செய் திரைப்படம் திட்டமிட்ட எண்ணிக்கையை விட குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வந்திருப்பது அப்படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் ஹீரோ நகுல் ‘செய் படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்த படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தோம். அதை முடித்து விட்டு சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது. அதில் ‘செய்’ திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும். ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது. இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம்.

நாங்கள் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் நாங்கள் சரியான தேதிக்காக காத்திருந்தோம். அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் அனுமதிக்காக காத்திருந்தோம். நாங்கள் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது என்றும் தீர்மானித்தோம். அதன் பிறகு நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அதற்காக யாருடைய மனதும் புண்படுத்த வேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16 ஆம் தேதியை ஒப்புக்கொண்டோம்.

Related Posts
1 of 11

ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16 ஆம் தேதியன்று படம் வெளியாகும். ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 சென்டர்களில் படம் வெளியாகாது என்றும், அந்த தேதியில் விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன்’ என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம்.

திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம். எங்களுடைய படத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதி கடிதம் அளித்திருக்கிறார்கள். ஆனால் அந்த படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய படமான ‘செய்’ படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறோம்.” என்றார்.