நயன்தாராவுடன் செல்ஃபி : தவமிருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

கமிட்டாகிற போதே படத்தின் புரமோஷனுக்கும் வர மாட்டேன் என்கிற கண்டிஷனையும் போட்டுத்தான் புதுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
அப்படி ஒரு கண்டிஷன் போட்டாலும் படப்பிடிப்புகளில் சரியான நேரத்தில் ஆஜராகி எந்த இம்சையும் கொடுக்காமல் நடித்துக் கொடுத்து விடுகிறார். அதனால் தான் இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாகவும், முன்னணி நடிகையாகவும் இருக்கிறார்.
இப்படி பல ஆண்டுகளாக புரமோஷனுக்கு வர மாட்டேன் என்கிற கொள்கையோடு இருந்தவரை அந்தக் கொள்கையை கைவிடச் செய்திருக்கிறது ‘டோரா’.
சற்குணம் தயாரிப்பில், அவருடைய சிஷ்யர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த ‘டோரா’ காரை மையக்கதையாக வைத்துத் தயாராகியிருக்கும் பக்கா த்ரில்லர் படம். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் படம் இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் புதுமையான முறையில் படத்தை புரமோஷன் செய்தால் தான் படத்தை ஓட வைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு, டோரா படத்தை ஓட வைக்க புதிய விளம்பர யுக்தியை கையாண்டுள்ளது ஆரா சினிமாஸ்.
ஆமாம், அமானுஷ்யமான ஒரு காரை மையமாகக் கொண்டு ‘டோரா’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே டோரா படத்தில் இடம்பெறும் அந்த காரைப்போன்று டம்மியான கார்களை உருவாக்கி, சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், ஐனாக்ஸ், பிவிஆர், தேவி, லுக்ஸ், சங்கம் உட்பட பல தியேட்டர்களில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.
அந்தக் கார் உடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தால், அவர்களில் இருந்து சிலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் நயன்தாராவை சந்திக்கவும், அவருடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தன்னுடைய படங்களின் புரமோஷனுக்கு வராத நயன்தாரா டோரா படத்தின் புரமோஷனுக்காக ரசிகர்கள் உடன் செல்பி எடுத்துக் கொள்ள முன் வந்ததே பெரிய விஷயம்தான்.