தமிழ்நாட்டுல சோறு தின்னுட்டு ஜல்லிக்கட்டை எதிர்க்கிறீங்களே? வெட்கமா இல்லையாடா? : கொந்தளித்த சிம்பு
பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகம் முழுவதும் சூடு பிடித்துள்ளது.
குறிப்பாக திரையுலகில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து முதலில் குரல் கொடுத்தவர் நடிகர் சிம்பு.
தன்னுடைய ஆதரவை மேலும் கூடுதலாக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது நாளை ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வித்தியாசமான போராட்டத்தை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று பேசியதாவது :
என் அப்பாவும், அம்மாவும் என்னை தமிழைப்படி, தமிழைப்படி என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள். தமிழ்ப்பால் ஊட்டி வளர்த்தார்கள். அதன் அருமையை நான் உணர்ந்தவன். அப்படிப்பட்ட தமிழை தாய்மொழியாக கொண்டதில் நான் மிகப்பெரிய பெருமை அடைகிறேன். இதுதான் என் வீடு, என் நாடு. தமிழ்தான் எனக்கு எல்லாமுமே. நான் முதலில் தமிழன், பிறகு தான் இந்தியன். என்னை இந்த அளவுக்கு வளர்த்தது தமிழ். எனக்கு சொத்து, புகழ் அனைத்தும் அளித்தது எல்லாமே தமிழ்தான்.
ஆனால், தமிழர்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளையும் கண்டு தமிழர்கள் பொறுமை காத்து வருகின்றனர். தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிரிந்து கிடப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி எங்களை அனாதை ஆக்கி விட்டீர்கள். அனைத்தையும் ஏற்றுக் கொள்வது தான் தமிழர்களின் பலம் மற்றும் பலவீனம். அனைத்தையும் ஏற்றுக் கொண்டோம். ஆனால், எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து எங்கள் பாரம்பரியம், கலாச்சாரத்தின் மீது கை வைத்தால் பொறுமையாக இருக்க முடியுமா?
தமிழகம் என்ன தனி நாடா? தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது? தமிழகத்தின் மீது தொடர்ந்து பாரபட்சம் காட்டுவது ஏன்? ”சிலம்பாட்டம்” படத்தில் காளையுடன் பழக மிகவும் கஷ்டப்பட்டேன். காளையை பழக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும்.
மற்ற மாநிலங்களில் பிறந்தவர்கள் அல்லது வெளிநாடுகளில் பிறந்தவர்கள் ஜல்லிக்கட்டுவை எதிர்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து விட்டு, தமிழ்நாட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டே சிலர் ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். உங்களுக்கெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதற்கு வெட்கமாக இல்லையாடா?
ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களை கண்டு பெருமைப்படுகிறேன். இளைஞர்கள் போராட என்ன அவசியம் உள்ளது? தமிழக போலீஸைவிட சிறந்த காவல்துறை உலகில் யாரும் கிடையாது. ஆனால், அந்த காவல்துறை இளைஞர்களை அடிக்கிறது. ப்ளீஸ் அண்ணே… தயவு செய்து போராடுற இளைஞர்களை அடிக்காதீங்க. முடிஞ்சா தயவுசெஞ்சு நீங்க அன்னைக்கு வேலைக்கே வராதீங்க. வீட்ல உட்கார்ந்திருங்க.
தமிழர்கள் அனாதைகள் இல்லை, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தீர்களா? நான் கேட்பேன் என் தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் முன்ன வந்து நிற்பேன்.
ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு என்ன அருகதை உள்ளது? பசுக்களை துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்கள் தான் காளை மீதான அக்கறை பற்றி பேசுகின்றனர். எந்த மிருகத்தையும் துன்புறுத்தக் கூடாது என்றால் நீங்கள் எதையுமே சாப்பிட முடியாது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து 10 நிமிடம் காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்தவுள்ளேன். தமிழ் உணர்வு உள்ளவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அனைவரும் இதேபோன்று நாளை மாலை அவரவர் இருக்கும் இடத்திலேயே 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள். எனக்காக நிற்க வேண்டாம். நம் இனத்துக்காகவும் நம் உரிமைக்காகவும் நில்லுங்கள். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒன்றிணைந்து போராடுவோம்.
எது எதற்கோ செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறவர்கள், தமிழுக்காகவும், தமிழன் என்ற உணர்வுக்காகவும் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்துங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்றார் சிம்பு கொந்தளிப்போடு…