வெளிக் கம்பெனி படங்களை வாரிக்குவிக்கும் சிவகார்த்திகேயன்!
தொடர்ந்து தனது நண்பரின் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரித்த படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ தோல்விக்குப் பிறகு வெளிக்கம்பெனி தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, டைரக்டர் எம்.ராஜேஷ் இயக்கும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
அதைத் தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் புதுப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம், ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து புதுப்படங்களை கமிட் செய்து வருகிறார்.
தற்போது இந்த வரிசையில் லைகா நிறுவனமும் இணைந்திருக்கிறது. லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் 17-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
கதாநாயகி யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விக்னேஷ் சிவன் படம் என்பதால் நயன்தாரா தான் இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பார் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்த ரஷ்மிகா மந்தனா தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2020-ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.