என்னை விட ஹன்ஷிகா அழகா? : ”சீனியர் நடிகை”க்கு வந்த சீரியஸ் டவுட்டு…

தெலுங்கில் ரிலீசான ”சல்யூட்” படத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் மேக்கிங் பிடித்துப் போய் அப்படத்தின் இயக்குநர் ராஜசேகருக்கு போனைப் போட்டார் மாஜி நடிகை ஜெயப்பிரதா.
”நான் ஜெயப்பிரதா பேசுறேன்… உங்க சல்யூட் படத்தை தான் டிவியில பார்த்துக்கிட்டிருக்கேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க, என் மகனை ஹீரோவா வெச்சு ஒரு படம் பண்ணித்தர முடியுமா?” என்று கேட்க அப்படி ஆரம்பமானது தான் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியிருக்கும் ”உயிரே உயிரே” திரைப்படம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ”இஸ்க்” படத்தின் ரீமேக்கான இதில் சித்து ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடித்திருக்கிறார்.
தமிழில் விஷாலின் ”சத்யம்” படத்துக்குப் பிறகு ராஜசேகர் இயக்கும் படமிது.
”இந்தப் படத்துல நான் கமிட்டான உடனே முதல்ல ஜெயப்பிரதா மேடத்துக்கிட்ட சொன்ன விஷயம் ஹன்ஷிகாவைப் பத்தித்தான். மேடம் இந்தப் படத்துக்கு ஹன்ஷிகா தான் ஹீரோயினா வேணும்னு பிடிவாதமா சொன்னேன். ஏன்னு கேட்டப்போ தயவுசெஞ்சி ”ஒரு கல் ஒரு கண்ணாடி”, ”எங்கேயும் காதல்” ரெண்டு படங்களையும் பாருங்கன்னு சொன்னேன். அப்படி துருதுருன்னு லவ்லியா ஒரு பொண்ணு தான் இந்தப் படத்துக்கு செட்டாகும், அதனால ஹன்ஷிகாவை நடிக்க வெச்சிட்டேன்.
கேரளா ஆலப்பியில் மாலை 41/2-6 மணி வரையில் கிடைக்கக்கூடிய அந்த லைட்டிங்கில் ‘ஓ பிரயா’ என்ற ஒரு பாடல் எடுத்தோம். ஹன்சிகாவுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பாடலை எடுத்திருக்க முடியாது. சித்துவும், ஹன்சிகாவும் அருமையாக நடித்துள்ளனர். காதல் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தர வேண்டும்” என்பது தான் இந்தப் படத்தின் கரு என்றார் ராஜசேகர்.
அவரைத் தொடர்ந்து பேசிய சீனியர் நடிகை ஜெயப்பிரதா ”இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமையும். எங்களது புரொடக்ஷன் கம்பெனியில் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்கள் தயாரித்துள்ளோம். இந்தப்படம் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு எனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறோம்.
எனக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு வேறு எங்கும் கிடைக்காதது. என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தத் துறைக்கு வந்தால் அது தமிழில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்பது என் கனவு. இந்தப் படம் மூலமாக அது நிறைவேறியுள்ளது.
இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே’ என வர்ணித்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அது எனக்கு சற்று பொறாமையாகத் தான் இருந்தது. அது பற்றி நான் விவேகாவிடமே கேட்டேன். ‘லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே கூட என்னிடம், நடிகைகளிலேயே மிக அழகான பெண் நீங்கதான்னு சொல்லியிருக்கிருக்கிறார். ஆனால் நீங்கள் ஹன்ஷிகாவை அழகு என்று வர்ணித்திருக்கிறீர்களே..? என்னை விட அவர் அழகா என்று கேட்டேன்” என்றார் சிரித்துக் கொண்டே…
வயசானாலும் அங்கீகாரத்தை விட்டுக் கொடுக்க முடியுமா..?