விக்ரமுக்கு தேசிய விருது இல்லை! : இது என்னங்க அநியாயமா இருக்கு?

இப்படித்தான் கடுங்கோபத்தில் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் விக்ரமின் அபிமான ரசிகர்கள்.
63-வது தேசிய விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது வெற்றிமாறன் இயக்கிய ”விசாரணை” படம் உட்பட இளையராஜா, நடிகர் சமுத்திரகனி ஆகியோருக்கும் சேர்த்து மொத்தம் ஐந்து விருதுகள் தமிழ்சினிமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்படி அறிவிக்கப்பட்ட பட்டியலில் ”ஐ” படத்தில் உடலை வருத்தி நடித்த சீயான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்படாமல் புறக்கணித்தமைக்கு விக்ரம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், திரையுலகினரையும் கூட அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
2015ம் ஆண்டு ரிலீசான ”ஐ” படத்தில் விக்ரம் பெரும் உழைப்பை போட்டிருந்தார் என்பது உலகறிந்த உண்மை. அந்தப் படத்தின் ஆடியோ பங்ஷன் மேடையிலேயே படத்தின் இயக்குநர் ஷங்கர் ”ஐ” படத்துக்காக விக்ரம் பட்ட கஷ்டத்தை சொல்லி ”அவரைப் போல ஒரு சின்சியர் நடிகரை நான் பார்த்ததே இல்லை” என்றும் பாராட்டினார். அந்தளவுக்கு தனது நடிப்புத் திறமையை ”ஐ” படத்தில் காட்டியிருந்தார் விக்ரம்.
பல மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்ற போதும் வேறு எந்த புதுப்படத்தையும் விக்ரம் கமிட் செய்யவில்லை.
அப்படிப்பட்டவருக்கு 63-வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது தரப்படாதது பெருத்த அவமானம் என்று திரையுலகினர் சீறத் தொடங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக ”ஐ” படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் தேசிய விருது தேர்வுக்குழுவை கடுமையாக சாடியிருக்கிறார்.
“இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் விக்ரமுக்கு இடமில்லை. பல நேரங்களில் தேசிய விருதுகள் அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. என்னைப் பொருத்தவரை தேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பு இல்லை; அவருக்கு கொடுக்காததால் அது தேசிய விருதுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு” என்று கொந்தளித்திருக்கிறார்.
அவரைப் போலவே விக்ரமின் தீவிரமான ரசிகர்களும் ”விக்ரமுக்கே தேசிய விருது இல்லேன்னா,வேற யாருக்கு கொடுக்கப் போறீங்க?” ”இதென்னங்க அநியாயமா இருக்கு?” என்றெல்லாம் தேசிய விருது தேர்வு குழுவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.