இளையராஜா இசையில் சிங்கள ராணுவத்தின் அட்டூழிங்களை புட்டு புட்டு வைக்கப்போகும் ‘18.05.2009’
2008-ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை 18.05.2009 வரை நீடித்தது.
சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்து விட முடியாது.
தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறி பிடித்த மாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்று வெளிகளில் கரைந்து விட்டது!
தமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்து விடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கும் படம் தான் 18.05.2009.
இசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கியிருக்கும் இப்படத்தை குருநாத் சலசானி தயாரித்திருக்கிறார்.
சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசைப்பிரியாவின் வாழ்க்கையை படமாகக் கொண்டு தயாரான ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படத்தை இயக்கினார் இப்படத்தின் இயக்குனர் கு.கணேசன். ஆனால் அதற்கு இசைப்பிரியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் ஈழப் பிரச்சனையைப் பேசும் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது.
படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பார்த்திபன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஈழ மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர். மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றையும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த 18.05.2009.