வயதானவர்களின் தூய்மையான அன்பை பேசும் ”சீயான்கள்”
கே.எல். புரொடக்ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரித்துள்ள படம் ”சீயான்கள்”.
வைகறை பாலன் இயக்கியுள்ள இப்படம் தேனி அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 70 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்தப்படம். மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான் சொர்க்கம். அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது.
”சீயான்கள்” அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை.
இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், அவர்களுக்கு பல மாதங்கள் நடிப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. “சீயான்” என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்” என்றார்.
படத்திற்கு ஐ.ஈ. பாபுகுமார் ஒளிப்பதிவு செய்ய, மப்பு ஜோதி பிரகாஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.