மும்பையில் தொடங்கியது ‘காலா’ : நெல்லைத் தமிழில் பேசி அசத்திய ரஜினி!

‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் அவருடைய 164-வது படத்தில் இணைந்திக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த இந்தக் கூட்டணியில் தயாராகும் இப்படத்துக்கு காலா என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
இதிலும் ஒரு தாதாவாக ரஜினி நடிக்கிறாரோ? என்கிற சந்தேகத்தை கிளப்பிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் தனக்கே உரிய ஸ்டைலில் கம்பீரமாக காட்சியளித்தார் ரஜினிகாந்த்.
நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் 12வது படம் இதுவாகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான். அவருக்குப் பின் இந்தப்பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே.
காலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே தலைவர் 164 படத்தில் நடிக்கிறது.
முன்னதாக மே 29-ம் தேதி மும்பையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் முதல் காட்சியாக ரஜினியும், சமுத்திரக்கனியும் பங்குபெறும் அரசு அலுவலகத்தில் பேசுவது போல படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் நெல்லைத் தமிழில் பேசி நடித்தார் ரஜினிகாந்த்.
ரஜினி இதுவரை நெல்லைத் தமிழ் பேசி எந்தப்படத்திலும் நடித்ததில்லை. முதல்முறை அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடிப்பது தமிழ்சினிமா ரசிகர்களுக்கே புதுமையானதாக இருக்கும் என்கிறது படக்குழு.
மும்பை படப்பிடிப்பு முடிந்ததும் அதன் தொடர்ச்சியாக சென்னையிலுள்ள ஈ.வி.பி வளாகத்தில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.