ரசிகர் மன்றத்தில் கோஷ்டி மோதல்! : ரஜினிக்கு புது தலைவலி
ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்கிற குழப்பம் வழக்கம் போலவே இழுத்துக் கொண்டிருக்க, சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி ரசிகர் மன்றத்தில் கோஷ்டி மோதலை ஆரம்பித்து வைத்திருக்கிறது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரஜினியின் நெருங்கிய நண்பர் சத்ய நாராயணா தான் மன்றத் தலைவராக இருந்தார். அதன் பிறகு அந்தப் பொறுப்பிலிருந்து அவரை விடுவித்த ரஜினி தலைவர் பொறுப்பை சுதாகரனிடம் கொடுத்தார். ரஜினியின் இந்த முடிவு தான் அவருக்கே இப்போது புது தலைவலியாக வந்து நிற்கிறது.
தலைவராக சுதாகரன் உள்ளே வந்ததும் தனது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் என எல்லோருக்கும் மன்றத்தில் அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்க ஆரம்பித்து விட்டாராம். அவரின் இந்த நடவடிக்கையின் உச்சம் அரங்கேறியது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தான் என்கிறார்கள் ரஜினியை நேரில் சந்திக்க முடியாமல் பாதிக்கப்பட்ட ரசிகர்கள்.
ஆமாம், அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களில் முக்கால் வாசி பேர் சுதாகரனின்உ றவினர்களும், வேண்டப்பட்டவர்களும், நெருக்கமானவர்களும் தானாம். இதனால் பல ஆண்டுகளாக உண்மை விசுவாசியாக இருந்த நூற்றுக்கணக்காக ரஜினி ரசிகர்களுக்கு அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க முடியவில்லை. மீறி நெருக்கிக் கேட்ட ரசிகர்களிடம் 5000 ரூபாய் வரை பணம் வசூலித்து விட்டு ரஜினியை சந்திக்கிற அனுமதி சீட்டு வழங்கியிருக்கிறார்கள்.
சுதாகரன் செய்யும் இவ்வித ‘திடீர்’ ஆதிக்கம் சத்யநாராயணா தலைவராக இருந்த போது அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் சுதாகரன் கை தான் தற்போது ஓங்கியிருப்பதால் அவருடைய கை டிக் செய்து கொடுத்ததன் அடிப்படையில் சைதை ரவி என்கிற ரஜினியின் பல ஆண்டு விசுவாசியை சங்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார் ரஜினி.
மேலும் இன்னும் சில பேர்களை டிக் செய்து நீக்க லிஸ்ட்டில் வைத்திருக்கிறாராம் சுதாகரன். அவர்கள் எல்லோரும் அடுத்தடுத்து நீக்கப்படலாம் என்கிறார்கள்.
சுதாகரனின் இந்த நடவடிக்கை மற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. யார் மீது தவறு என்று முழுமையாக விசாரிக்காமலேயே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ரஜினி சம்மதம் சொல்வது மன்றங்கள் கலைந்து போகும் நிலைக்குத்தான் கொண்டு போகும் என்கிறார்கள் அவர்கள்.
மன்றத் தலைவர் என்ன சொன்னாலும் அதனடிப்படையில் செயல்பட ரஜினி அனுமதி கொடுப்பது சரிதான் என்றாலும், இங்கே தலைமையே பெரும் சர்ச்சையாக இருக்கிற போது அதை யார் சரி செய்வது?
எல்லாம் அறிந்த ரஜினிக்கே வெளிச்சம்!