கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்! : இளையராஜாவின் நடவடிக்கையால் எஸ்.பி.பி வேதனை

இசைஞானி என்று உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா.
அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது இனி தன்னுடைய இசையமைப்பில் வெளியான எந்தப் பாடலையில் மேடைக்கச்சேரிகளில் பாடக்கூடாது என்பது தான் இளையராஜா அந்த நோட்டீஸில் சொல்லியிருக்கும் முக்கியமான செய்தி.
இதுகுறித்து தனது முகநூலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மன வேதனையோடு எழுதியிருப்பதாவது :
ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகி விடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தர வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.
என் மகன் சரண் தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். ‘எஸ்.பி.பி.50’ என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை.
ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தான் தெரியவில்லை. முதலில் சொன்ன மாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்க வேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்.
இனி வரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்.”
இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.