வாழ்நாள் முழுவதும் சிம்புவுக்கு உண்மையுள்ளவனாக இருப்பேன்! : உருகிய சந்தானம்

பா.ஜ.க பிரமுகரை தாக்கிய பஞ்சாயத்து சூடு குறைய ஆரம்பித்த நேரமென்பதால் வெளியில் தலை காட்டுவாரோ இல்லையே என்கிற சந்தேகம் எல்லோருக்குள்ளும் இருந்தது.
ஆனால் அது வேறு, தொழில் வேறு என்கிற ரீதியில் தான் ஹீரோவாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் சந்தானம். வந்திருந்தவர் வலது கை விரவில் அடிதடியில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு ப்ளாஸ்த்ரி ஒற்றை போட்டுருந்தார்.
விடிவி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜி.எல் சேதுராமன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்க இவர்களுடன் விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய சந்தானம் சிம்புவைப் பற்றிப் பேசிய பேச்சு தான் உருக்கமாக அமைந்திருந்தது.
”என்னோட இந்த ‘சக்க போடு போடு ராஜா’ படம் இந்தளவுக்கு ஒரு மாஸ் படமா மாறி உங்க முன்னாடி நிக்கிறதுக்கு முக்கிய காரணம் என்னுடைய நண்பர் சிம்பு அவர்கள் தான். அவர் இல்லை என்றால், உண்மையிலயே இப்ப நான் இந்தப் படத்துல இல்லை.
அவருக்கு நன்றின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா, இந்தப் படத்துக்கு மியூசிக் பண்றதுக்காக முதல்ல ஹாரீஸ் ஜெயராஜை போய்ப் பார்த்தோம். அப்போ அவர் ரொம்ப பிஸியா இருந்தார். அதுக்கப்புறம் சிம்புவை இந்தப் படத்துக்கு மியுசிக் பண்ண சொல்லி கேக்கலாமேன்னு தயாரிப்பாளர் விடிவி கணேஷ் சொன்னாரு. ஆனால், நான், ‘அவர் ஒரு ஹீரோ, அவர் வந்து மியூசிக் பண்ணுவாரா..?” ன்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், விடிவி தான் உனக்காக அவர் கண்டிப்பா பண்ணுவாருன்னு சொன்னாரு.
போய் சிம்புக்கிட்ட கேட்ட உடனே பண்ணலாமே அதுக்கென்னன்னு சொல்லிட்டு கொஞ்சம் டைம் கொடு யோசிச்சிட்டு சொல்றேன்னு சொன்னார். அப்புறம் ஒரு நாள் ஹைதாராபாத்ல ‘மன்னவன் வந்தானடி’ ஷூட்டிங்கில இருந்தப்ப நைட் போன் பண்ணி உன் படத்தோட மியூசிக் டைரக்டர் யாருன்னு தெரியுமா?ன்னு கேட்டார். தெரியலைன்னு சொன்னேன். இப்பப்பார் மெசேஜ்ல வரும்னு சொல்லி ஒரு மெசேஜை அனுப்பினார். பார்த்தா எஸ்.டி.ஆர் மியூசிக்கல்ன்னு இருந்துச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
எல்லாப் பாடல்களுக்கும் இரவு, பகலா வேலைப் பார்த்து ரொம்ப சூப்பரானப் பாடல்களைக் கொடுத்தார். வெளியில சில பேருக்கு சிம்பு மேல கோபம் இருக்கலாம், சில பேருக்கு பாசம் இருக்கலாம். ஆனா என்னைப் பொருத்தவரைக்கும் அவர் எனக்கு ஒரு ‘காட் ஃபாதர்’ மாதிரி.
சிம்பு வந்து எனக்கு எல்லா தருணங்களிலும் எனக்கு பக்கபலமா இருந்திருக்காரு. அவருக்கு நன்றின்னு ஒரு வார்த்தை போதாது, கடைசி வரைக்கும் அவருக்கு உண்மை உள்ளவனா இருப்பேன்,” என்று உருக்கமாகப் பேசினார் சந்தானம்.