சிவகார்த்திகேயனின் சமூக அக்கறைக்கு கிடைத்த ‘பாக்ஸ் ஆபீஸ்’ பரிசு!
சிவகார்த்திகேயன் படம் என்றாலே நையாண்டி, நக்கல் டைமிங் என பக்காவான காமெடிப்படமாகத்தான் இருக்கும். அந்த வழக்கமான ஃபார்முலாவை மாற்றி மாஸ் ஹீரோ லெவலுக்கு அவரை முழுமையாக மாற்றியிருக்கும் படம் ‘வேலைக்காரன்.’
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான இந்தப்படம் எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி விநியோகஸ்தர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் வரவேற்பும், வசூலும் குறித்து இயக்குனர் மோகன் ராஜாவிடம் பேசியபோது, ”நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கிடைத்துள்ளது.
கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் 30 தியேட்டர்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.
சமுதாய அக்கறை கொண்ட நல்ல படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என்பது மறுபடியும் வேலைக்காரன் படத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. குடும்பங்களோடு தியேட்டருக்கு மக்கள் வந்து இப்படத்தை ரசிப்பது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு சமுதாய அக்கறை உள்ள கதையை ஜனரஞ்சகமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் எனக்கு பெரும் திருப்தி” என்றார்.