சோஷியல் மீடியாவை எதற்காக பயன்படுத்த வேண்டும்? – ரஜினி அறிவுரை
கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், தற்போது மீண்டும் (டிசம்பர் 26-ம் தேதி) தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.
சென்ற முறை சேரில் உட்கார்ந்து மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்த ரஜினி, இந்தமுறை அத்தனை ரசிகர்களுடனும் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சந்திப்பில் தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
முதல் நாளான இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் ‘முள்ளும் மலரும்’ படத்தின் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரஜினி உடனான தங்களது நட்பு குறித்தும், அவரைப் பற்றியும் பல அறிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் பேசிய ரஜினிகாந்த் “மே மாதம் நடந்த சந்திப்புக்கு பிறகு ‘காலா’ படத்தின் சூட்டிங், மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்பொழுது தான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது.
என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகுகாலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை.
இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்து விட்டனர், அதற்கு மிகவும் வருத்தப்பட்டேன், மன்னிக்கவும். ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். அதிலிருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்று தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.