முதல் முறையாக நைஜீரியாவில் ‘கபாலி’ ரிலீஸ் : திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள்!

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘கபாலி’ படம் தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள்.
நைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்காக படத்தை தங்களது சொந்த முயற்சியால் திரையிட்டுள்ளார்கள்.
‘கபாலி’ படத்தைப் பார்க்க தமிழ் மக்கள், இந்திய மக்கள், நைஜீரியா, அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு மக்கள் ஆகியோரும் படத்தை ஆர்வத்துடன் வந்து ரசித்துள்ளார்கள்.

6 காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது.
படம் பார்க்க வந்த அனைவருக்கும் மதிய உணவும், இரவு உணவும் ரஜினி ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
நைஜீரிய நாட்டுக்கான இந்திய தூதர் திரு.பி.என்.ரெட்டி ‘கபாலி’ படக் காட்சியை துவக்கி வைத்துள்ளார்.
அனைவரும் ‘கபாலி’ படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ரஜினிகாந்திற்கு வயது 60க்கும் மேல் என்று சொன்னால் நைஜீரிய மக்கள் நம்பவேயில்லையாம். அடுத்த முறை ரஜினிகாந்த் படம் வெளியிட்டால் அதை நைஜீரிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடுங்கள் என ரஜினி ரசிகர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டதாக அனைவரும் பெருமையுடன் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன் ‘வேதாளம், தெறி’ ஆகிய தமிழ்ப் படங்கள் அங்கு ஓரளவிற்கே வரவேற்பைப் பெற்றதாம். ‘கபாலி’ படத்திற்கு அனைவரும் ஆர்வத்துடன் வந்து படம் பார்த்து ஹவுஸ்புல்லாக்கி விட்டனர். இன்னும் கூட சில காட்சிகளை நடத்த அனைவரும் கேட்டுக் கொண்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தார்கள்.
‘கபாலி’ பட வெளியீடு நைஜீரியாவிலும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.