நடிக்கவில்லை… வாழ்ந்திருக்கிறார் : இயக்குநர் மு.களஞ்சியத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!

பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காலி போன்ற வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் மு.களஞ்சியம் இப்போது நடிகராகவும் வெற்றிவாகை சூட ஆரம்பித்திருக்கிறார்.
”கருங்காலி” படத்தில் நடிகை அஞ்சலியோடு இணைந்து எதிர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இயக்குநர் ஷங்கர், கே.வி.ஆனந்த் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணகுமாரின் “களவு தொழிற்சாலை“ படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்தார்.
அடுத்ததாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கதிரவன் என்கிற புதிய இயக்குநரின் “கோடைமழை” என்கிற படத்தில் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்.
அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ”கோடைமழை” படத்தில் மு.களஞ்சியம் வெள்ளத்துரை என்கிற கதாபாத்திரத்தில், நடிகை பிரியாங்காவின் அண்ணனாக வாழ்ந்திருக்கிறார்… கம்பீரமான தோற்றமும், முறைப்பான நடை, உடை, பாவனையும் வெள்ளத்துரை கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
படம் பார்த்த அனைவரும் மு.களஞ்சியத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். ”கோடைமழை” படத்தை பிரத்தியேகமாக பார்த்த நடிகர் விஜய் சேதுபதி ‘’தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகன் கிடைத்துள்ளார், இயக்குநர் மு,களஞ்சியத்திற்கு போலீஸ் கெட்-அப் சரியாக பொருந்தி இருக்கிறது, திருநெல்வேலி மாவட்டத்துக்காரனாவே மாறி வாழ்ந்திருக்கிறார்’’ என்று மனம் விட்டு பாராட்டினார்.
”கோடை மழை” திரைப்படத்தை தொடர்ந்து மு.களஞ்சியம் “முந்திரிக்காடு” என்கிற, புது முகங்கள் நடிக்கிற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.